Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி/; லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் கோவில் ராமர், சீதை, லட்சுமணர் சுவாமி வெண்கல சிலைகள் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக கோவில்களில் கலைநயம் மிக்க சுவாமி சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை பலரும் திருடி வெளிநாடுகளுக்கு விற்று கோடி, கோடியாக பணம் சம்பாதித்தனர். இதையடுத்து வெளிநாடுகளில் உள்ள அரிய சிலைகளை மீட்க தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்திய அரசின் உதவியுடன் போராடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோவிலில் 1978-ல் திருட்டு போன சிலைகள் தொடர்பாகவும் பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இதில் அந்த சிலைகள் லண்டனில் இருப்பது இணையதள பக்கம் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து நாகப்பட்டினம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் அதிகாரிகள் கொடுத்த தடயங்கள் அடிப்படையில் அந்த சிலைகளை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அங்குள்ள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
ஆன்லைன் மூலம் இந்த நிகழ்ச்சியை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல், தமிழக அரசின் முதன்மை செயலர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் ஆகியோர் பார்த்தனர்.
இதில் ராமர், சீதை, லட்சுமணர் சுவாமி வெண்கல சிலைகள் உள்ளன. மீட்கப்பட்ட சிலைகள் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.